அதிபத்த நாயனார்

 

    

     அதிபத்தர்_நாயனார்

சோறுடைத்த சோழநாட்டில்

சொக்கனவன் பக்தரென

பரதவ குலந்தனிலே

பாரினில் உதித்தவரே . . .


அண்டமெல்லாம் அதிர்ந்திடவே

அழகாக நடனமாடும்

நடராஜன் தாழ்போற்றும்

தங்கமகன் அதிபத்தரே . . .


அலைகடலில் அலைந்தாடும்

பரதவரை வழிநடத்தும் 

பண்பான உத்தமரே

பாங்கான நல்தலைவரே . . .


நாயன்மார்களுள் நயமான

மாமனிதராய் மண்ணில் உதித்தவரே

விண்ணவர் போற்றும்

முக்கண்ணனவனின்

முதன்மைத் தொண்டரே . . .


பொருட் பற்றையே

தம்பற்றாகக் கொண்டவருள்

அப்பற்றைத் துச்சமென

துடைத்து தூக்கியெறிந்த

தூயவுள்ளங் கொண்டவரே . . .


கடலலையில் வலைவிரித்து

வசமான மீன்பெற்று 

வாழ்வுதனை நடத்திடினும்

அகப்பட்ட மீன்களிலே

தலைமீனை பரமசிவனுக்கென

படைத்தளித்த பரமபக்தரே . . .


பெரும்பாலும் பெருந்துன்பமாய்

ஓர்மீனே யகப்பட்டாலும்

ஒரவஞ்சனை செய்யாது

ஒப்புக்கொண்ட வாக்குப்படி

உமையாளின் சரிபாதி 

உலகாளும் சுடலையாண்டி

சிவனுக்களித்த சீராளரே . . .


வறுமையிலும் வளங்குன்றா

அன்போடு வாழ்ந்து

பொன்மீன் கண்டும் அதைப்

பொருட்படுத்தாது சிவபெருமான்

தாழ் பணிந்து அர்பணித்தவரே . . .


பேராசை கொள்ளாத

பேரன்பு கொண்டவரே

பேரன்பின் பயனாக

பெரும்பேறு பெற்றவரே

சிவபெருமான் அருளாலே

நீடுபுகழ் கண்டவரே . . .


உம்புகழ் இவ்வுலகம் 

உள்ளவரை வாழிய வாழியவென

போற்றி வணங்குகிறோம் . . .


     ஓம் நமச்சிவாய நமஹ . . .


       *ரேணுகா ஸ்டாலின்*



0/Post a Comment/Comments