ஒன்றை இழந்து தான் மற்றொன்றை பெறமுடியும் - காதலை இழந்து எதைப் பெற்று என்ன பயன்

சொல்லடா என் மாயக்கண்ணா


ஒன்றை இழந்து தான்

மற்றொன்றை பெற முடியுமாம்

உன்னை இழந்து 

வேறொன்றைப் பெற 

என்னால் எப்படி முடியும் . . .

நீயில்லா மனம் முழுதும்

வெறுமை நிரம்பி 

வெம்மைப் படுத்துமே

நான் என் செய்குவேன் . . .

ஒருவாசல் மூடி மறுவாசல் 

வைப்பானாம் இறைவன்,

 நான் வரும் திசை பார்த்து 

வாஞ்சையுடன் நீயிருக்கும்

அவ்வாச லடைத்த பின் 

மறுவாசல் திறந்தென்ன பயன் . . .

உனைக்காணா கண்கள்

ஏக்கமுடன் எட்டி எட்டிப் 

பார்த்து துடிதுடிக்குமே

நான் என் செய்குவேன் . . .

அகில உலகம் அனைத்திலும்

ஒன்றிற்கு ஈடாய் 

மற்றொன்று உண்டென்று 

உறுதியாய்ச் சொல்கிறார்கள் . . .

ஈரேழுலகத்திலும் உனக்கு

ஈடாய் வேறொன்றில்லை

நீயே என் வேர் என்று

எப்படி உரைப்பேன் . . .

உயிர் உருகி ஓடும் முன் 

சடுதியில் வந்து சட்டென

விடை பகர்ந்திடடா - என் 

மாயக் கண்ணா . . .


          *ரேணுகா ஸ்டாலின்*

0/Post a Comment/Comments