ஆயுதம் தரிப்பதா அன்பை அறிவதா.
அரைநிர்வாணப் பக்கிரியாய்
அன்பின் வழி நின்று
அகிம்சை முறையில் சென்று
ஆனந்தம் பொங்கிட
அனைவரும் மகிழ்ந்திட
சுதந்திரம் பெற்றுத் தந்த
தேசப்பிதா இன்றிருந்தால் . . .
அன்பை அறிவதாலோ
அகிம்சை வழியில் செல்வதாலோ
பயனேது மில்லை யிங்கு
ஆயுதம் தரிப்பதே
தேவை என்றி ருப்பார் . . .
நம் தேசத்தைக் காத்திட
கையில் கைத்தடியோடு
ஏராளமாய் ஆயுதங்கள்
ஏந்தி யிருப்பார்
எதிரிகளை தாக்கி
தராளமாய் தக்க பதிலடி
தந்துபின் தடைகளின்றி
நாட்டைக் காத்திருப்பார் . . .
போதி மரத்தடி யிலமர்ந்து
நமக்கு போதனை செய்து
சாதனை நாயகனாய்
நம்முள் உறைந்திருக்கும்
புத்தன் இன்றிருந்தால் . . .
அன்பின் வழியில் சென்றால்
பித்த னாவாய் நீ - சித்தம்
தெளிந்திடு மானிடா
இம்மண்ணில் வாழ்ந்திட
அயுதம் தரிப்பதே
நல் அறனடா என்றி ருப்பார் . . .
பொல்லாங்கு செய்வோரை
பொசுக்கி யழித்திட
போதனைகளை விடுத்து
போர்க் கலைகளை
பயிற்றுவிக்கும் கூடாரமாக
போதி மரத்தடியை
மாற்றி யிருப்பார்
ஆயுதங்களை கையாளும்
புதுப்புது யுக்திகளை
அசராது நமக்கு போதித்திருப்பார் . . .
சரித்திர அரியணையில்
நல் சான்றாக வீற்றிருக்கும்
சங்ககால காப்பியமாம்
மணிமேகலையின்
காப்பிய நாயகி இன்றிருந்தால் . . .
அமுதசுரபி தனை யெடுத்து
அனைவரின் பசிப்பிணி
போக்கிடும் துறவர
வாழ்வதனை விடுத்திருப்பார் . . .
பெண்மையை பேணாது
அவள் கற்பினை களவாடி
சிற்றின்ப சீண்டலில்
பேரின்பம் கொண்டதா யெண்ணி
பேடியாய் வாழ்வோரை யழித்திட
ஆயுதம் தரிப்பதே
நான் வேண்டும் ஓர்
வரம் என்றி ருப்பார் . . .
அவ்வரம் பெற்றிடவே
நீண்ட நாள் தவம்
மேற் கொண்டிருப்பார்
அள்ள அள்ளக் குறையா
ஆயுதம் அருளிடும் அற்புத
கலயம் ஒன்றினை
வேண்டி யிருப்பார்
அதைக் கொண்டே நம்
அகிலத்தை காத்திருப்பார் . . .
"வாடிய பயிரைக்
கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று
பாடி பாரினில் உயர்ந்தவர்
சத்திய ஞான சபை நிறுவி
சாதிய பாகுபாடுகளைச் சாடியவர்
திருவருட்பிரகாச வள்ளலார்
இன்றிருந்தால் . . .
சாதிய சாக்கடையில் வீழ்ந்து
சந்ததிகளை அழித்துக்
கொண்டிருப் போரை காத்து
மீளாத் துயரிலிருந்து மீட்டெடுக்க
ஆயுதம் தரித்தலே
அன்பாளன் எந்தன் அறிவுரை
என்றுரைத் திருப்பார் . . .
சாதிகள் அற்ற சமுதாயத்தை
சகத்தினில் சமைத்திடவும்,
சத்தியத்தைக் காத்திடவும்
பதுமைகளாய் வாழாமல்
வாழும் முறைமை யுணரும்படி
புதுமைகளை புகுத்தி யாவர்க்கும்
புரிந்திடும்படி ஆயுதம் தரித்தலே
சிறந்ததென செப்பியிருப்பார்
நம் சிந்தை தெளிய வைத்திருப்பார் . . .
அகமெங்கும் அன்பை விதைத்து
முகமெங்கும் புன்னகை நிறைத்து
தடுமாறி டாமலும், தடம் மாறிடாமலும்
தரணியில் வாழ்ந்து உயர்ந்திட
அநீதிகள் மட்டுமே அரங்கேறி
அசுர வேகத்தில் வளர்ந்துள்ள
அகிலமதை மீட்டு நல்லிசை மீட்டிட
ஆயுதம் தரித்தலே
நல்லறிவு என்றறிவோம் . . .
அன்றாட வாழ்வை போராடி வென்றிட
தொடர் அநீதிகளை கொன்று குவித்திட
அமைதி யெங்கும் அகலாது
நிலை நாட்டிட
அகிலத்தில் என்றும் நின்று நிலைத்திட
அன்பை அறிவதற்கு முன்
ஆயுதம் தரித்தலே
நல்லறிவு என்றறிவோம் . . .
*ரேணுகா ஸ்டாலின்*
Post a Comment