இதுவும் கவிதை தானுங்கோ "புரியாத புதிர்"

 


#புரியாத_புதிர்


இத்தனை சாவிகள் இருந்தும்

இறுக்கிப் பூட்டிய உன் மனக்கதவை

திறக்க வழியின்றி தவிக்கிறேன் . . .


வகைவகையாய் சாவிகளை 

மாட்டியவள் வாகாகத் திறக்கும் 

சூட்சுமத்தையும் சொல்லியிருந்தால்

சற்று ஆசுவாசப் பட்டிருப்பேனே . . .


இப்போது பார் 👁️

சாவிகளின் கோளாறா!!! இல்லை

உன்மேல் நான் வைத்த 

அன்பின் கோளாறா!!! 

ஏதேதோ  எண்ணி யெண்ணித் 

துடித்துக் கொண்டிருக்கிறேன் . . .


ஏகாந்தப் பெருவெளியில் என்னைத்

துடிதுடிக்க விட்டு விட்டு  நீ 

எங்கோ சென்று விட்டாய் நானோ !!!

பிதற்றிக் கொண்டிருக்கிறேன் . . .


ஆமாம் சற்று நில்லடி சகியே

ஒன்று மட்டும் புரியவேயில்லை

சாவிகளை மரத்தில் மாட்டிய போதே

மனமும் மரமரத்துப் போகும்படி 

செய்து கொண்டாயோ!!!


விந்தையான நின் செயல் கண்டு

சிந்தையில் துளிர்த்த மௌனங்களால்

கண்கள் நிலைத்து நிற்கின்றன

சாவிகளின் மீதே  . . .  


ஆயினும் நித்திரையிலும் நீங்கா

நின்மீதான அன்பின் பிணைப்பில் 

மனம் லயித்து மௌனம் கலைத்து 

எழத் துணிந்து விட்டேன் . . .


துருப்பிடித்த சாவிகளை எல்லாம்

தூக்கி எறிந்து விட்டு - 

அன்பெனும் ஆயுதத்தால்  

அத்தனை  தடைகளையும் 

தகர்த்தெறிந்து 

தடம் பதித்திடலாம்  மென்று . . .


                ரேணுகா ஸ்டாலின்

0/Post a Comment/Comments