ஓணம் பண்டிகையின் வரலாறு உங்களுக்கு தெரியுமா ? | Onam History in Tamil

 


ஓணம் பண்டிகையின் வரலாறு உங்களுக்கு தெரியுமா ? | Onam History in Tamil

இந்தியாவின் தென் தமிழகத்திலும் மற்றும் கேரள மாநிலத்திலும் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்புமிக்க திருவிழாவாக கருதப்படுவது இந்த ஓணம் பண்டிகை. இதை ஓணம் அல்லது ஆவணி திருவோணம் என்றும் கூறுவர்.

கேரள மக்களால் சாதி, மத வேறுபாடு இன்றி கொண்டாடப்படும் பண்டிகையாக இந்த ஓணம் பண்டிகை விளங்குகிறது. “கொல்லவர்ஷம்” என்ற மலையாள ஆண்டின் முதல் மாதமான “சிங்கம்” மாதத்தில் ஓணம் விழா கொண்டாடப்படுகிறது. இதைக் கேரளத்தின் “அறுவடை திருநாள்” என்றும் அழைப்பார்கள். மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் ஓணமாக கொண்டாடப்படுகிறது.

ஓணம் பண்டிகை வரலாறு | Onam History in Tamil

மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆட்சி செய்து வந்தார். இவர் அரசர் பக்த பிரகலாதனின் பேரன் ஆவார். மகாபலி அசுர குலத்தில் பிறந்து இருந்தாலும் தர்ம சிந்தனை உள்ளவராக இருந்தார். கொடை அளிப்பதில் சிறந்து விளங்கியவர். இந்த மகாபலி சக்கரவர்த்திக்கு கர்வமும் சற்று அதிகம் இருந்தது. மகாபலி சக்கரவர்த்தி உலகத் தலைமை பதவி வேண்டி (அதாவது இந்திரன் வகிக்கும் பதவி) ஒரு யாகம் செய்ய விரும்பினார்.

இந்த யாகம் நிறைவேறிவிட்டால் இந்திரனின் பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்ற காரணத்தினால் தேவர்கள் அனைவரும் ஒன்று கூடி அதை தடுக்க ஸ்ரீமன் நாராயணனிடம் வேண்டுகோள் விடுத்தனர். மகாபலி சக்கரவர்த்தியை தனது சூழ்ச்சியால் வீழ்த்திட ஸ்ரீமன் நாராயணன் வாமன அவதாரம் எடுத்தார். வாமனர் மகாபலி சக்கரவர்த்தியிடம் தன் கால் அளவில் மூன்றடி நிலத்தை தானமாக கேட்டார். மூன்றடி நிலத்தை தானமாக கொடுப்பதற்கு மகாபலி சக்கரவர்த்தியும் ஒப்புக்கொண்டார்.

மகாபலி சக்கரவர்த்தி ‘மூன்றடி நிலத்தை’ தாரை வார்த்து, கொடுத்தேன் என்று சொன்னார். உடனே வாமனனாக வந்த ஸ்ரீமன் நாராயணன் ஓங்கி உயர்ந்து ஓர் அடியால் பூமியையும், மற்றொரு அடியால் விண்ணையும் அளந்து முடித்து, மூன்றாவது அடிக்கு இடம் எங்கே என்று மகாபலி சக்கரவர்த்தியிடம் கேட்டார். வந்தது ஸ்ரீமன் நாராயணன் என அறிந்து கொண்ட மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய தலையில் மூன்றாவது அடியை வைத்துக் கொள்ளுமாறு சொன்னார்.

பகவானின் திருவடியை தாங்கும் பெரும்பேறு அவருக்கு கிடைத்தது. மகாபலி சக்கரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க மூன்றாவது அடியினை மகாபலியின் தலையில் வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த சமயத்தில் மகாபலி சக்கரவர்த்தி எம்பெருமானிடம் ஒரு வரம் கேட்டார். “வருடம் ஒருமுறை இதே நாளான ஆவணி திருவோண நாளில்” நான் இந்த பூமிக்கு வந்து எல்லா மக்களும் மகிழ்ச்சியோடு வாழ்வதை பார்த்து செல்ல வேண்டும் என்னும் வரத்தை கேட்டார். ஸ்ரீமன் நாராயணனும் அந்த வரத்தை அருளினார். மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் மக்களைக் காண வரும் இந்த “ஓணம்” நாளை ‘திருவோணம்’ என்று போற்றி விழாவாக கொண்டாடி வருகிறார்கள்.

சங்க கால பதிவுகளில் ஓணம் பண்டிகை

ஓணம் பண்டிகை தினமானது சங்க கால பதிவுகளில் விஷ்ணுவின் பிறந்த நாளாகவும், விஷ்ணு வாமனராக அவதாரம் எடுத்ததும் அன்றுதான் எனக் குறிப்புகள் உள்ளது. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக்காஞ்சியில் பாண்டிய நாட்டு மக்கள் பத்து நாட்களாக எவ்வாறு ஓணம் பண்டிகையை கொண்டாடினார்கள் என மாங்குடி மருதனார் விவரித்து எழுதியுள்ளார்.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் பெரியாழ்வார் அவர்கள் பரம்பரையாக திருமாலுக்கு தொண்டு செய்வதையும், ஆவணி மாதம் திருவோண நன்னாளில் நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்ததாகவும் குறிப்புகள் உள்ளது.

தேவாரத்தில் சம்பந்தர் அவர்களும் ஓணம் பண்டிகையை பற்றி விளக்குகிறார்.
ஓணம் கபலிசரத்தில் ( மயிலை) எவ்வாறு கொண்டாடப்பட்டது என்று விளக்கியுள்ளார்.

அனைவருக்கும் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்

0/Post a Comment/Comments