சூரசம்ஹாரம் நடக்காத ஒரே ஒரு முருகனின் படை வீடு எது தெரியுமா?
முருகனின் படைவீடுகளில் ஒன்றான திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் நிகழ்வு நடப்பது இல்லை.
ஏன் தெரியுமா? அதன் பின் உள்ள புராண காரணங்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
முருகனை நினைத்தாலே ஆனந்தம் உண்டாகும். அவனின் திருப்பெயர்களையும், துதிப் பாடல்களையும் பாடி பரவசமாக அவரின் ஆலயங்களில் தரிசனம் செய்ய பல முருக பக்தர்களின் எண்ணமாக இருக்கும்.
கந்த சஷ்டி விரதம்: ஐப்பசி மாதம் சதுர்த்தசி அமாவாசை திதியில் தீபாவளி கொண்டாட்டத்திற்கு பிறகு வரக்கூடிய ஆறு நாட்கள் கந்த சஷ்டி பெருவிழா விரதநாள் தொடங்கும். இந்த கந்த சஷ்டி விரத நாளில் முருக பக்தர்கள் பல்வேறு கோரிக்கைகளை மனதில் வைத்து இறைவனை முழுவதுமாக சரணடைந்து பல்வேறு வகையில் விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.
கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பெரும்பாலான பக்தர்கள் இந்த ஆறு நாட்களும் முருகனின் திருக்கோயிலிலேயே தங்கி விரதம் அனுஷ்டித்து, அவனது திருப்பெயர்கள், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் என அவருக்குரிய பாடல்களை நாள் முழுவதும் பாடி முருகனை தொழுவார்கள்.
சூரசஹாரம் : சஷ்டி விரதத்தின் நிறைவு நாளில் முருக பக்தர்கள் உணவு, நீர் இன்றி மிக தீவிரமாக விரதம் இருந்து, அன்று மாலை நிகழும் சூரபத்மனையும், அவனது சகோதரர்களையும் முருகப்பெருமான் தன் வேல் ஆயுதத்தால் சம்ஹாரம் செய்யக்கூடிய சம்ஹார நிகழ்வை கண்டு களிப்பர்.
அப்போது பக்தர்களின் மனதில் சூரரை சம்ஹாரம் செய்தது போல நம் வாழ்வில் இருக்கும் துன்பங்கள் நீங்கும் என மன உறுதி பெறுவர். மறு நாள் முருகன் - தெய்வானை திருமண நிகழ்வை கண் குளிர பார்த்து தங்களின் விரதத்தை முடிப்பர்.
இந்த கந்த சஷ்டி விரதமும், சூரசம்ஹார நிகழ்வும் முருகனின் படைவீடுகளில் மிக கோலாகலமாக கடைப்பிடிப்பது வழக்கம். ஆனால் முருகனின் ஒரு படைவீட்டில் மட்டும் இந்த கந்த சஷ்டி விழா நிகழ்வு நடக்காமல் மிக அமைதியாக இருக்கும் என்பது தெரியுமா?
அப்படிப்பட்ட முருகனின் படை வீடு தான் திருத்தணி. முருகனின் 5ம் படைவீடு. முருகப்பெருமான் சினம் தணிந்து, வள்ளியை மணம் புரிந்து மிக அமைதியாக அமர்ந்து காட்சி தரக்கூடிய தலம் தான் திருத்தணி. தணிகை என்பதன் பொருளே சினம் தணிதல் தான். திருத்தணி தணிகை முருகன் கோயிலில் முருகப்பெருமான் சினம் தணிந்து பக்தர்களுக்கு அருளுகின்றார். இதன் காரணமாக இந்த கோயிலில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவது இல்லை.
இருப்பினும் முருகனின் அருளைப் பெறக்கூடிய கந்த சஷ்டி விழா மட்டும் கொண்டாடப்படுகிறது. இந்த கந்த சஷ்டி திருவிழாவையொட்டி கோயிலில் வள்ளித் திருக்கல்யாண நிகழ்வு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வை கண்குளிரக் காண்பவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடி வரும் என நம்பப்படுகிறது.
Post a Comment