இன்னும் எத்தனை நாட்கள்..? (கவிதை)

 


#இன்னும்_எத்தனை_நாட்கள்


இன்னும் எத்தனை நாட்கள் 

கனவுகளைத் துறந்து விட்டு

கவலைகளைச் சுமந்து கொண்டு 

கண்ணீருடன் வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

குட்டக்குட்ட குனிந்து கொண்டு 

ஏமாளியாக கோமாளி வேஷம்

போட்டுக்கொண்டு வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

ஏகாந்தப் பெரு வெளியில் 

ஏதேதோ சிந்தனையில் சிறகொடிந்த 

கிள்ளை போல வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

சாதிக்கொரு சங்கம் வீதிக்குநூறு

வில்லங்கம் வைத்துக் கொண்டு 

வலியோடு வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

மூடநம்பிக்கைக்கு முட்டுக் கொடுத்து 

புரிந்தும் புரியாதவர் போல்

முணுமுணுப்போடு வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

உழைப்பின் உன்னதம் உணராமல்

அன்பின் பாதையிலிருந்து அகன்று

அடிமையாக வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

தோல்விகளை மட்டும் சிந்தையிலேற்றி 

வெற்றிப் பயணத்தினைத் மறந்து

சிறுபிள்ளையாக வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

விட்டுப் போன வாய்ப்பை எண்ணி

முயற்சியோ பயிற்சியோ ஏதுமின்றி 

மூலையில் முடங்கி வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

அறியாமை இருளில் மூழ்கி

நல்லறிவை அடகு வைத்துவிட்டு 

குற்றவுணர்வுடன் வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

பண்டைய கலாச்சாரம் மறந்து

தமிழர் பண்பாடுகளைத் துறந்து 

பாவிகளாக வாழப் போகிறோம். . .


இன்னும் எத்தனை நாட்கள் 

மனிதப் பிறப்பின் மாண்பினை 

உணராமல் வெறும் மாக்களாக

புரியாமல் வாழப் போகிறோம். . .


சாதிவெறிக்கு சவுக்கடி கொடுக்காமல்

எவரையும் ஏமாற்றிக் கெடுக்காமல்

துரோகங்களை துண்டாடி வெல்லாமல் 

எத்தர்களை கழுமரமேற்றிக் கொல்லாமல்

எந்திரத்தனமாக  இப்படியே நம்மை நாமே 

சமாதானப்படுத்திக் கொண்டு 

எதையும் கண்டுங் காணாமல் வாழ்வது 

இன்னும் எத்தனை நாட்கள்...?

தெரிந்தவர் கொஞ்சம் சொல்லுங்களேன்!!


                ரேணுகா ஸ்டாலின் ✍️

                    பட்டிவீரன்பட்டி

0/Post a Comment/Comments