🌝 ஆடி பௌர்ணமி..
ஆடி மாத பௌர்ணமி என்பது சிவ வழிபாட்டுக்கு மட்டுமின்றி அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறும்.
பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது. அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூஜைகள் செய்து வழிபாடு செய்யும்போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கும்.
பௌர்ணமி அன்று கோவில்களிலும், வீட்டிலும் விளக்கேற்றி வழிபடுவதால் நிறைய நற்பலன்களை அடைய முடியும்.
அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்து, புடவை சாற்றி, பொங்கல் படையலிட்டு வழிபட்டால் குடும்பத்தில் வளம் பெருகும். நிம்மதி குடிகொள்ளும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும்.
அதேபோல், ஞானக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்கிறது புராணம். எனவே ஆடி பௌர்ணமி நாளில், ஸ்ரீஹயக்ரீவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும். குழந்தைகள் கல்வியில் ஜொலிப்பார்கள். கல்வியும், ஞானமும் கிடைத்து சகல ஐஸ்வர்யங்களுடனும் வாழலாம்.
ஆடி பௌர்ணமியின் சிறப்பு
நாளைய தினம் பெண்கள், அம்மன் கோவில்களில் காலையும், மாலையும் விளக்கேற்றி வழிபட்டால் குடும்பத்தில் நிம்மதி தவழும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம்.
ஆடி பௌர்ணமி விரதம்
ஆடி மாத பௌர்ணமி தினமான அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்துவிட்டு உணவேதும் அருந்தாமல் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். வீட்டின் பூஜையறையில் அம்பாள் படத்திற்கு விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். மேலும், அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பூக்களால் அர்ச்சனை செய்து சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த வஸ்திரம் சாற்றி, சிவப்புக்கல் ஆபரணம் அணிவித்து வழிபாடு செய்வது சிறந்தது.
ஆடி பௌர்ணமி தினத்தன்று அம்பிகைக்கு பாலாபிஷேகம் செய்து, வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது மிக அற்புதமான பலன்களை கொடுக்கவல்லது. பின்பு நைவேத்தியப் பிரசாதத்தை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க வேண்டும்.
இவ்வாறு ஆடி பௌர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபடுவதால் குழந்தைப்பேறு கிடைக்காமல் தவிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியங்கள் உண்டாகும். வியாபாரங்களில் எதிர்ப்புகள் நீங்கி லாபங்கள் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
கிரிவலம் செல்ல உகந்த நேரம்..!!
இந்த ஆண்டு ஆடி பெளர்ணமி திதி இன்று (ஜூலை 20ஆம் தேதி) மாலை 06.10 மணிக்கு தொடங்கி அதற்கு அடுத்த நாள் ஜூலை 21ஆம் தேதி மாலை 04.51 மணிக்கு முடிவடைகிறது.
ஜூலை 21ஆம் தேதி காலை சூரிய உதயத்தின் போதே பெளர்ணமி திதி உள்ளதால் அன்றைய தினமே ஆடி பெளர்ணமியாக எடுத்துக் கொள்கப்படுகிறது. இருந்தாலும் கிரிவலம் எப்போது செல்வது என்ற குழப்பம் நிலவுகிறது.
பெளர்ணமி திதி இன்று மாலையே துவங்கி விடுவதால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் இன்று மாலை 06.10 மணிக்கு மேல் கிரிவலத்தை துவங்கலாம்.
நாளை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21ம் தேதி) கிரிவலம் செல்ல விரும்புபவர்கள் பௌர்ணமி திதி முடியும் முன்பே அதாவது மாலை 04.51 மணிக்கு முன்பாக கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். ஏனெனில் மாலை 04.52 மணி முதல் பிரதமை திதி தொடங்குவதால் அதற்கு முன்பாக கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
🙏
Post a Comment