#மழைக்குச்_சற்று_முன்னதாக
மண்வாசனை நாசி
துளைக்கும் முன்னே
என்னவள் மல்லி
வாசனை வாசல் நுழைந்தது
இடியோசை செவிப்பறை
எட்டும் முன்னே -கொலுசொலி
முழங்க அவளின் பாதம்
தரையை முத்தமிட்டது
பளிச்சிடும் மின்னல் ஒளியைக்
கண்கள் காணும் முன்னே
அவளின் கருவிழி யிரண்டும்
என்னைக் கவர்ந்தது
சில்லென்ற மழைத்துளி கண்டு
ரசிக்கும் முன்னே
அவளின் சிறு புன்னகை
ரசனையைத் தூண்டியது
மழைத்துளி மண்
தொடும் முன்னே
அவளின் இதழோர சிறுதுளி
என் கன்னத்தில் கசிந்தது
குடை விரித்து வெளியில்
செல்லும் முன்னே
என்னவள் முந்தானை
குடையாகி அரவணைத்தது
மழைக்குச் சற்று முன்னதாகவே இவையெல்லாம் நடக்கத்
தொடங்கி முடிந்துவிட்டது . . .
அதனால்தானோ!! என்னவோ..!!
கோடை மழையை
ரசிப்பதை விட்டுவிட்டு
என்னவளை ரசித்து ரசித்து
ருசித்து விட்டேன்
மழைநேரத் தேனீராய் . . .
கோபங் கொள்ளாமல்
மீண்டும் வா கோடை மழையே
என் காதல் ராட்சசியோடு
காத்திருக்கிறேன் உனை ரசித்திட . . .
ரேணுகா ஸ்டாலின் ✍️
Post a Comment